செந்தமிழ்சிற்பிகள்

வை.மு.கோதைநாயகியம்மாள் (1901 - 1960)

வை.மு.கோதைநாயகியம்மாள் (1901 - 1960)

பிறப்பு: 01.12.1901

மறைவு: 20.02.1960

பிறப்பிடம்: நீர்வளூர், செங்கல்பட்டு

தாய்: பட்டம்மாள்    தந்தை: என்.எஸ். வெங்கடாச்சாரி  

துணைவர்: வை.மு.பார்த்தசாரதி

  • புதின எழுத்தாளர்; மேடைப் பேச்சாளர், கவிஞர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர்.
  • இவருடைய முதல் நாடகம் இந்திர மோகனா, 1924ஆம் ஆண்டு நோபில் அச்சகத்தார் மூலம் வெளிவந்து பெரும் வரவேற்பினைப் பெற்றது.
  • அவருடைய அருணோதயம், வத்சகுமார், தயாநிதி ஆகிய நாடகங்கள் பலமுறை மேடை ஏற்றப்பட்டுப் பலரது பாராட்டையும் பெற்றவை. 
  • முதல் நூல் தந்த ஊக்கத்தால், வைதேகி எனும் புதினத்தை இயற்றினார். அதனை வடுவூர் துரைசாமி ஐயங்கார் திருத்தம் செய்து கொடுத்ததுடன், தானே தன் மனோரஞ்சனி இதழில் வெளியிட்டு ஊக்கம் தந்தார்.
  • 1925ஆம் ஆண்டு நின்று போயிருந்த ஜகன்மோகினி மாத இதழை விலை கொடுத்து வாங்கி அதே பெயரில் வெளியிடத் தொடங்கினார். இவ்விதழ் அவர் இறப்பதற்குச் சில ஆண்டுகள் முன்புவரை 35 ஆண்டுகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
  • மொத்தம் 115 புதினங்களை இவர் எழுதினார். அவற்றுள் இந்து – இசுலாமியர் ஒற்றுமை, பெண் விடுதலை, நாட்டுப்பற்று, மதுவிலக்கு, விதவைத் திருமணம் ஆகியவற்றை வலியூட்டினார்.
  • 1937ஆம் ஆண்டு சொந்த அச்சகம் ஒன்றை நிறுவி, அச்சுத் தொழிலிலும் சிறந்து விளங்கினார்.
  • இசையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அவரது குரல்வளம், உச்சரிப்பு, பாடும்திறன் ஆகியவற்றாலும் புகழ் பெற்றிருந்தார். காங்கிரஸ் மேடைகள் தோறும் நாட்டுப் பற்றினை வலியுறுத்தும் பாடல்களைப் பாடினார்.
  • பாடல்கள் புனைவதிலும் வல்லவர். இவர், அம்பா மனோஹரி, கங்கணாலங்காரி, அம்சப்ரமாரி, தவளி ஹம்சி போன்ற சில அபூர்வ ராகங்களில் இயற்றிய கிருதிகள் எல்லாம் ‘இசை மார்க்கம்’ என்ற புத்தகமாக வெளிவந்துள்ளன.
  • இவருடைய நாவல்கள் பல திரைப்படமாகவும் வெளிவந்தன. அநாதைப் பெண், தயாநிதி, ராஜமோகன், தியாகக்கொடி, நளினசேகரன் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. சித்தி படத்துக்காக சிறந்த கதையாசிரியர் விருது அவருக்கு அவர் இறந்தபின் வழங்கப்பட்டது.
  • கள்ளுக்கடை மறியலுக்காகவும் லோதியன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்திலும் அந்நியத்துணி எதிர்ப்பு இயக்கத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். சிறையில் இருந்தபடியே சோதனையின் கொடுமை, உத்தமசீலன் ஆகிய புதினங்களை எழுதியுள்ளார்.

 

வை.மு.கோதைநாயகியம்மாள்

(1901 - 1960)

வை. மு. கோதைநாயகி (திசம்பர் 1, 1901 - பெப்ரவரி 20, 1960), தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர் ஆவார். துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். இவரைச் சமகால எழுத்தாளர்கள், ‘‘நாவல்ராணி, கதா மோகினி, ஏக அரசி’’ என்று போற்றினர். இதுவரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் இவரைச் சரியாக அடையாளம் காட்டவில்லை. 115 புதினங்களை எழுதியவர். தான் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று இயங்கினார்.

கோதைநாயகி, திசம்பர் 1, 1901 ஆம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம், நீர்வளூரில் வாழ்ந்த என்.எஸ். வெங்கடாச்சாரி, பட்டம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். வைணவ குடும்பத்தைச் சேர்ந்த இவரைச் சிறு வயதில் கோதை என்றும் ஆண்டாள் என்றும் செல்லமாக அழைத்தனர். பிறந்த ஒரு வயதிலேயே தன் தாயை இழந்தார். அதனால் அவரது பாட்டி வேதவல்லி அம்மாளும், அவரது சிற்றப்பா மனைவியான கனகம்மாளும் அவரை வளர்த்தனர். தன் சிற்றப்பா திருத்தேரி ராகவாச்சாரியாரிடம் நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி முதலிய பல தமிழ் இலக்கியங்களைக் கற்றார்.

சமூக மறுமலர்ச்சிக்கும், பெண்களின் முன்னேற்றத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவருடைய கற்பனை வளமும் சேர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டின. அவருக்கு ஓரளவு மட்டுமே எழுதத்தெரிந்ததால், இவர் கூறியதை அவரது தோழி பட்டம்மாள் எழுத, இந்திர மோகனா என்ற நாடகத்தை உருவாக்கினார். இந்நாடகத்தை 1924-ஆம் ஆண்டு நோபில் அச்சகத்தார் மூலம் நூலாக வெளியிட்டார். இந்நாடகத்தை இந்து, சுதேசமித்திரன், நியூ இந்தியா உள்ளிட்ட அக்கால இதழ்கள் பாராட்டி எழுதின. இந்நாடகத்தைப் பலர் கேட்டு வாங்கி நடித்தனர். இவ்வாறு தனது முதல் நூலுக்குக் கிடைத்த வெற்றி கோதைநாயகியை மேலும் எழுதத் தூண்டியது எனலாம். அதனைத் தொடர்ந்து ஒரு நாடகத்தையும் எழுதி முடித்தார். அதன் பிறகு பட்டம்மாளிடம் தமிழை எழுதவும் படிக்கவும் கற்கத் தொடங்கினார்.

வை.மு.கோ அம்மையார் இலவசமாக குழந்தைப்பேறு மருத்துவம் பார்ப்பதும் உண்டு. தமது உறவினர்களுக்கு மட்டுமின்றித் தன்னை நாடிவந்து குழந்தைப்பேறு பார்க்க வேண்டும் என்று யார் அழைத்தாலும் சாதி சமய வேறுபாடின்றி அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவம் பார்ப்பார். இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று அம்மையார் அதனைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தார்.

1956-ஆம் ஆண்டில் அம்மையாரின் ஒரே மகனான ஸ்ரீநிவாசன் திடீரென்று இறந்தார். அவரது மறைவு அம்மையாரை நிலைகுலைய வைத்துவிட்டது. பெண்களின் வழிகாட்டியாக, சிறந்த விடுதலைப்போராட்ட வீராங்கனையாக, நாடக ஆசிரியராக, நாடக இயக்குநராக, இசை வல்லவராக, பத்திரிக்கை ஆசிரியராகப் பன்முக ஆற்றலுடன் விளங்கிய நாவல் ராணியாகிய வை.மு.கோதைநாயகி அம்மாள், தன் மகன் இறந்து தான் மட்டும் இருக்கிறோமே என்று வருந்தி சரியாக உணவு உண்ணாமல் உறக்கமின்றி உடம்பை வருத்திக் கொண்டார். அதனால் அம்மையார் கொடிய காச நோய்க்கு ஆளானார். தாம்பரம் காசநோய் மருத்துவ மனையில் உரிய சிகிச்சை பெற்றும் பலனின்றி 1960-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் நாள் மருத்துவமனையிலேயே இறந்தார்.

வை.மு. கோதைநாயகி அம்மாளின் சில படைப்புகள்

ஜகன் மோகினி இதழில் வெளிவந்த வை.மு. கோதைநாயகி அம்மாளின் சில படைப்புகள்



வைதேகி (1925 – 4 பதிப்புகள்)

பத்மசுந்தரன் (1926 – 3 பதிப்புகள்)

சண்பகவிஜயம் (1927 – 2 பதிப்புகள்)

ராதாமணி (1927 – 4 பதிப்புகள்)

கௌரிமுகுந்தன் (1928 – 2 பதிப்புகள்)

நவநீதகிருஷ்ணன் (1928 – 2 பதிப்புகள்)

கோபாலரத்னம் (1929)

சியாமளநாதன் (1930 -2 பதிப்புகள்)

சுகந்த புஷ்பம் (1930)

ருக்மணிகாந்தன் (1930)

வீர வசந்தா அல்லது சுயேச்சையின் பரிபவம் (1930)

நளினசேகரன் அல்லது செருக்காலழிந்த சீமாட்டி (1930)

உத்தமசீலன் (1932 – 3 பதிப்புகள்)

கதம்பமாலை (1932 – 2 பதிப்புகள்)

பரிமள கேசவன் (1932 – 2 பதிப்புகள்)

மூன்று வைரங்கள் (1932 -2 பதிப்புகள்)

காதலின் கனி (1933 – 2 பதிப்புகள்)

சோதனையின் கொடுமை (1933 – 2 பதிப்புகள்)

படாடோபத்தின் பரிபவம் (1933 -2 பதிப்புகள் )

சாருலோசனா (1933 – 3 பதிப்புகள்)

தியாகக்கொடி (1934 – 2 பதிப்புகள்)

புத்தியே புதையல் (1934 – 2 பதிப்புகள்)

ஜயசஞ்சீவி (1934 – 4 பதிப்புகள்)

அமிர்த தாரா (1935 – 4 பதிப்புகள்)

ஆனந்தசாகர் (1935 -3 பதிப்புகள்)

பட்டமோ பட்டம்(1935 – 2 பதிப்புகள்)

பிச்சைக்காரக் குடும்பம் (1935 – 2 பதிப்புகள்)

பொங்கும் காதல் அல்லது மங்களபாரதி (1935 – 2 பதிப்புகள்)

அநாதைப் பெண் (1936 – 4 பதிப்புகள்)

இன்பஜோதி (1936 – 2 பதிப்புகள்

பிரேம பிரபா (1936 – 2 பதிப்புகள்)

ராஜமோஹன் (1936 – 2 பதிப்புகள்)

அன்பின் சிகரம் (1937 – 2 பதிப்புகள்)

சந்திர மண்டலம் (1937 – 2 பதிப்புகள்)

மாயப் பிரபஞ்சம் (1937 – 2 பதிப்புகள்)

உளுத்த இதயம் (1938)

மகிழ்ச்சி உதயம் (1938 – 4 பதிப்புகள்)

மாலதி (1938 – 3 பதிப்புகள்)

வத்ஸகுமார் (1938 )

வாழ்க்கையின் நாதம் அல்லது வானக்குயில் (1938 )

ஜீவியச்சுழல் (1938 -2 பதிப்புகள் )

கலா நிலையம் (1941 – 4 பதிப்புகள்)

க்ருபா மந்திர் (1934 -4 பதிப்புகள்)

மதுர கீதம் (1943 – 4 பதிப்புகள்)

வாத்சல்யம் அல்லது வாக்குத் தத்தம் (1943 – 3 பதிப்புகள்)

அமுத மொழி (1944)

பிரார்த்தனை (1945 )

அபராதி (1946 – 2 பதிப்புகள்)

தெய்வீக ஒளி (1947 -2 பதிப்புகள்)

புதுமைக் கோலம் (1947)

தபால் வினோதம் (1945 – 2 பதிப்புகள்)

கானகலா (1950)

தூய உள்ளம் (1950)

நியாய மழை (1950)

ப்ரபஞ்ச லீலை (1950)

ப்ரேமாஸ்ரமம் (1950)

மனசாட்சி (1950)

ஜீவநாடி (1950)

சௌபாக்கியவதி (1950)

நம்பிக்கைப் பாலம் (1951 -2 பதிப்புகள்)

பாதாஞ்சலி (1951)

ரோஜாமலர் (1951)

தைரியலக்ஷ்மி (1952)

சுதந்திரப் பறவை (1953)

நிர்மல நீரோடை(1953)

கிழக்கு வெளுத்தது (1958)